நயினார்குளம் திருநெல்வேலி
நீர் நிலை பற்றி
திருநெல்வேலி டவுணில் அமைந்துள்ள ஓர் அழகிய குளம் நயினார் குளம். மேற்குக் கரையில் நூற்றாண்டுகளைக் கடந்த மருதம், இலுப்பை, பனை மரச் சோலைகள், கிழக்குப் பகுதியில் பசுமையான நெல் வயல்களும் இக்குளத்தை மேலும் அலங்கரிக்கிறது. இக்குளம் கி.பி.1653 (கொல்லம் 828)க்குப் பிறகு தோண்டப்பட்டதாக இருக்கலாம், கிட்டத்தட்ட 360 ஆண்டுகளுக்கு முன்பு அழகப்ப செட்டியாரின் நிர்வாகத்தில் தென்காசியை சேர்ந்த திரு. நயினார் செட்டியார் அவர்களின் நன்கொடையால் இக்குளம் வெட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. நெல்லையப்பர் கோவில் கோபுரத்தின் பின்னனியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை ரசித்து மகிழ நயினார்குளம் வாய்ப்பளிக்கிறது. தென்மேற்கு கரையில் திருநெல்வேலி கால்வாய் வழியாக குளத்திற்குள் தண்ணீர் வருகிறது, வடகிழக்கு கரையில் உள்ள கடைகள், மற்றும் தச்சநல்லூரின் அல்லிகுளம் மற்றும் தென்கிழக்கு கரையில் தாமரைக் குளம் மற்றும் வயல்கள் அமைந்துள்ளன. அருகில் உள்ள நெல்லையப்பர் கோவிலின் “சந்திர தீர்த்தம்” தெப்பக்குளத்திற்கு நிலத்தடி வழியாக நீரினை நயினார் குளம் அளிக்கிறது. குளத்தின் மேற்கு கரையில் உள்ள பழமையான இலுப்பை, நீர் மருது மற்றும் பனை மரங்கள் பாம்புத் தாரா மற்றும் சாம்பல் நாரை ஆகிய பறவைகளுக்கு கூடு கட்டி இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பளிக்கிறது.